மகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு சாகும் வரை சிறை
சென்னை: திருவான்மியூர் அருகே, மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தைக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவான்மியூர் அருகே, 38 வயதான ஆட்டோ டிரைவர், தன் மனைவியுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்தாண்டு தாயார் வீட்டு வேலைக்கு சென்று விட்ட நிலையில், சிறுமியர் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, தந்தையான ஆட்டோ டிரைவர், ஒரு மகளை கடைக்கு அனுப்பி வைத்து விட்டு, 14 வயதான இன்னொரு மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என, மகளை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின்படி, நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தந்தையை கைது செய்தனர். வழக்கு விசாரணை, சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியின் தந்தை மீதான குற்றசாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சமும், சிறுமியின் தாயார், சகோதரிக்கு தலா 3 லட்சம் ரூபாயும், தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என, தீர்ப்பளித்தார்.