பணிக்கு திரும்பாத துாய்மை பணியாளர்கள் வீடுகள், சாலைகளில் குப்பை தேக்கம்
சென்னை, சென்னையில் துாய்மை பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், குப்பை பிரச்னைக்கு தீர்வை மாநகராட்சி ஏற்படுத்தாமல் இருப்பது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில், பணி பாதுகாப்பு இல்லை, ஊதியம் குறைக்கப்படுவதாக கூறி, துாய்மை பணியாளர்கள், 13 நாட்களாக ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராடி வந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, 13ம் தேதி நள்ளிரவில் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து துாய்மை பணியாளர்கள் இடையே, அரசுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை தவிர்க்க, மேயர் பிரியா, சில துாய்மை பணியாளர்களை வைத்து, முதல்வருக்கு நன்றி சொல்லும் நிகழ்வை நடத்தி வருகிறார். மேலும், நிருபர்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்பது வரை மேயர் பிரியா, துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அதேநேரம், சென்னை மாநகரில், குறிப்பாக வட சென்னையில், பெரும்பாலான மண்டலங்களில், தேக்கமடைந்துள்ள குப்பை பிரச்னையை தீர்வு காண, மாநகராட்சி எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை. அம்பத்துார் மண்டலம், முகப்பேர் கிழக்கு, 10வது பிளாக் போன்ற பகுதிகளில், வீடு, வீடாக குப்பை எடுக்கும் வாகனம் வந்து, ஒரு வாரத்திற்கு மேலாகிறது. அப்பகுதி மக்கள், குப்பை தொட்டி பகுதியில், வீடுகளில் தேங்கும் குப்பையை கொட்டி வருகின்றனர். குப்பை தொட்டியும் நிரம்பி தேக்கமடைந்து இருப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல், ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் குப்பை தேக்கமடைந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த இரு வாரங்களாக வீடுகள் மற்றும் சாலைகளில் குப்பை தேக்கம் காணப்படுகிறது. இதற்கு முன், போராட்டத்தை காரணமாக, அதிகாரிகள் கூறி வந்தனர். போராட்டம் முடிவுக்கு வந்தப்பின், வீடுகள், சாலைகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான முறையில் தேங்கும் குப்பைக்கு தீர்வு காணாமல், மேயர் பிரியா உள்ளிட்டோர் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில், சாலைகள் வரை குப்பை படர்ந்துள்ளது. துாய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் அதே வேகத்தை, சென்னையில் பெரும்பாலான இடங்களில் குப்பை தேக்கமடைந்து இருப்பதை அகற்றுவதிலும், மாநகராட்சி காட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். சாலையில் அமரவைக்கப்பட்டதால் அதிருப்தி திரு.வி.க.நகர் மண்டலம் கொளத்துார் தொகுதியில், நேற்று முன்தினம் இரவு துாய்மை பணியில் ஈடுபட்டோருக்கு, மாநகராட்சி சார்பில் நேற்று, காலை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 200 துாய்மை பணியாளர்களை, காலை 6:00 மணி முதலே கொளத்துார், சிறுவள்ளூர் பகுதி சாலையில் அமரவைத்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்த மேயர் பிரியாவும், அதிகாரிகளும், துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கினர். இதனால், நீண்ட நேரமாக சாலையோரம் அமரவைக்கப்பட்ட துாய்மை பணியாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இதற்கிடையே, 72வது வார்டு வ.உ.சி., நகர் முதல் தெருவில் உள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தை, 25க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் என கோஷமிட்டனர். 'ராம்கி' நிறுவனம் புதிதாக வேலைக்கு எடுத்த துாய்மை பணியாளர்களை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்து, அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டேரி போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்து, இருதரப்பிலும் சமரசப் பேச்சு நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.