கடன் குறித்து கேள்வி கேட்ட மனைவியை குத்தி கொன்று கணவர் தற்கொலை முயற்சி
திருவொற்றியூர், திருவொற்றியூர், டி.எஸ்.ஆர்., நகர், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் ரகு, 35; டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி, 32, தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம், பிள்ளைகள் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.வீட்டில் தனியாக இருந்த தம்பதியிடையே, நேற்று அதிகாலை வாய்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரகு, கத்தியை எடுத்து, ரேவதியின் இடுப்பில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.போலீசாரின் விசாரணைக்கு பயந்த ரகு, கத்தியால் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, ரேவதி உயிரிழந்த நிலையிலும் ரகு உயிருக்கு போராடிய நிலையிலும் கிடந்துள்ளனர்.போலீசார் ரகுவை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், ரேவதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தனர்.முதற்கட்ட விசாரணையில், ரகுவிற்கு அதிக கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரேவதி கேட்டு பிரச்னை செய்துள்ளார். கடன் வாங்கிய தொகையை யாருக்கு செலவழித்தாய் எனக்கூறி, நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டையிட்டுள்ளார்.ஆத்திரமடைந்த ரகு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியை குத்திக் கொலை செய்து, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தது தெரியவந்தது.