| ADDED : நவ 21, 2025 04:18 AM
ஆலந்துார்: தர்மபுரி மாவட்டம், வேட்னபேட்டை பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன், 31. பொறியாளர். இவர், நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து, சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல, நகை, பணம் உள்ள கைப்பையுடன் அமர்ந்திருந்தார். மின்சார ரயில் வந்ததும், கைப்பையை இருக்கையிலேயே வைத்துவிட்டு, ரயிலில் ஏறி சென்றுள்ளார். பூங்கா ரயில் நிலையம் சென்றதும், கைப்பையை விட்டு வந்ததை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, கடற்கரை ரயில்வே போலீசார், பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரை தொடர்பு கொண்டு, சிலம்பரசன் தவறவிட்ட கைப்பை குறித்து தெரிவித்தனர். பரங்கிமலை ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட ரயில்வே போலீசார், இருக்கையில் சிலம்பரசனின் கைப்பையை கண்டறிந்தனர். பின், சிலம்பரசனுக்கு தகவல் கொடுத்து, பாதுகாப்பு படை காவல் நிலையத்துக்கு வர வழைத்து ஒப்படைத்தனர். அவர் தவறவிட்ட கைப்பையில், 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப், 1.76 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க வளையல்கள், 9,000 ரூபாய் ஆகியவை இருந்தன.