| ADDED : டிச 03, 2025 06:51 AM
சென்னை : வடபழனி முருகன் கோவிலில், இன்று மகா கார்த்திகை தீபத்திருவிழா நடக்க உள்ளது பரணி கார்த்திகை திருநாளான நேற்று, வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள், உபயதாரர்கள் மூலம் விளக்குகள் வழங்கப்பட்டன. அவற்றில், 108 விளக்குகள் வள்ளி, தேவசேனா சுப்பிரமணியர் சன்னதியில், பக்தர்கள், உபயதாரர்கள் வாயிலாக ஏற்றப்பட்டன. மூலவர் சன்னதியில், 36 குத்து விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்த நிலையில், கார்த்திகை மகா தீபத் திருநாளான இன்று அதிகாலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. காலை 6:30 மணிக்கு அபிஷேகம் முடிந்தவுடன், மூலவருக்கு விசேஷ ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. பகல் 12:00 மணிக்கு உச்சிகாலத்தில் வெள்ளி கவசம் சார்த்தப்படுகிறது. மாலை 5:00 விசேஷ வஸ்திர சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு கார்த்திகை பூஜை நடத்தப்படுகிறது. மேலும், 27 நட்சத்திரங்கள், நான்கு கோபுரங்கள், எட்டு சன்னதிகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இரவு 8:30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.