கோலடி கழிவுநீர் மையம் இடம் மாற்றணும்: திருமா
திருவேற்காடு:திருவேற்காடு, கோலடியில் உள்ள, 8.3 ஏக்கர் மைதானத்தின், ஒரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என திருவேற்காடு நகராட்சி அறிவித்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை, வி.சி., தலைவர் திருமாவளவன் நேற்று பார்வையிட்டார்.பின், அவரை சூழ்ந்து கொண்ட பகுதிவாசிகளிடம், திருமாவளவன் பேசியதாவது:கோலடி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து, அமைச்சர் நாசருடன் ஆலோசித்தேன். இந்த திட்டம், நான்கு ஆண்டுகளுக்கு முன், அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, உலக வங்கியிடம், 1,000 கோடி வரை கடன் பெற்று தொடங்கப்பட்ட திட்டம். திட்டத்தை அமைச்சர் அல்லது அதிகாரிகளால் தடுக்க முடியாது; முதல்வரால் மட்டுமே முடியும். ஓரிரு நாட்களில் முதல்வரை சந்தித்து, இந்த பிரச்னை குறித்தும், இத்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துவேன்.இவ்வாறு அவர் பேசினார்.