அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு
அடையாறு:அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை, தீயணைப்பு படையினர் மீட்டனர். தரமணி, அண்ணா தெருவை சேர்ந்தவர் சரவணன், 50. டிங்கரிங் கடையில் வேலை செய்து வருகிறார். ஐந்து ஆண்டுகளாக, சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று, மகள் தமிழரசி, தாய் விஜயா ஆகியோருடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அடையாறு திரு.வி.க., பாலம் அருகே சென்றபோது, சிறுநீர் கழிக்க வேண்டும் என, ஆட்டோ ஓட்டுநரிடம் கூறியுள்ளார். ஆட்டோ நின்றதும் இறங்கிய சரவணன், திடீரென பாலத்தில் இருந்து, அடையாறு ஆற்றில் குதித்தார். சக வாகன ஓட்டிகள், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் பைபர் படகில், பாலத்தின் கீழ் சிக்கியிருந்த சரவணனை மீட்டு கரை சேர்த்தனர். பின், ஆம்புலன்ஸ் வரவழைத்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாறு போலீசார் விசாரணையில், மனநலம் பாதிப்பு குறையாததால் மனம் உடைந்து, தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. தற்கொலைக்கு வேறு காரணம் இருக்குமோ என, போலீசார் விசாரிக்கின்றனர்.