தி.நகர் - கோடம்பாக்கம் சுரங்கப்பணி வெற்றிகரமாக நிறைவு செய்தது மயில்
சென்னை :மெட்ரோ ரயில் வழித்தடத்தில், தி.நகர் - கோடம்பாக்கம் இடையே சுரங்கப்பாதை பணியை, வெற்றிகரமாக நிறைவு செய்து, 'மயில்' என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளியே வந்துள்ளது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மூன்று வழித்தடங்களில் ஒன்றாக கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி பைபாஸ் வழித்தடம் உள்ளது. இத்தடம் 26.1 கி.மீ., துாரத்தில் அமைய உள்ளது. இதில், கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை, மேம்பால பாதையாகவும் அமைகிறது. இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரையிலான 10.03 கி.மீ., துாரம், சுரங்கப்பாதை பணி நடக்கிறது. இதன் கட்டுமானப் பணிகளை ஐ.டி.டி., சிமென்டேஷன் இந்தியா நிறுவனம் மேற்கொள்கிறது. இதற்காக, நான்கு சுரங்கம் தோண் டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தி.நகர் பனகல் பூங்கா-வில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி 2,047 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியில், 'மயில், பெலிகான்' ஆகிய சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்கள், அடுத்தடுத்து கோடம்பாக்கம் நிலையத்தை நெருங்கி வந்தன. இந்நிலையில், பனகல் பூங்கா -- கோடம்பாக்கம் நிலையம் வரை, 'மயில்' என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் நேற்று பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த இயந்திரம், ஆற்காடு சாலையில் மீனாட்சி கல்லுாரிக்கு அருகில் கோடம்பாக்கம் நிலையத்தை நேற்று வந்தடைந்தது. இந்த நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், ஐ.டி.டி., சிமென்டேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயந்த் பாசு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ், அசோக்குமார், தலைமை ஆலோசகர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா, பொது மேலாளர் ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்று, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சவால்களுக்கு மத்தியில் 190 கட்டடங்களை கடந்தது இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் வரையிலான இந்த சுரங்கப்பாதை பிரிவு, மிகவும் நீளமான பிரிவாகும். இதில், சுரங்கம் தோண்டும் இயந்திரமான மயில், 190 கட்டடங்கள் வழியாக செல்ல வேண்டியிருந்தது. அவற்றில் பெரும்பாலும் குடியிருப்பு கட்டடங்கள், அவற்றில் 50க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பழைய கட்டடங்கள். மேலும், பல ரயில் பாதைகளைக் கடப்பதற்கு முன், செயலில் உள்ள ரயில் பாதைக்கு இணையாக சுரங்கப்பாதையை துளையிட வேண்டியிருந்தது. இந்த சுரங்கப்பாதை இரண்டு சர்ச் வழியாகவும், கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு கீழேயும் சென்றது. சவால்கள் இருந்த போதிலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.