மகன் தீ வைத்து எரித்த சம்பவம் சிகிச்சை பலனின்றி தாய் பலி
செங்கல்பட்டு, செங் கல்பட்டில், மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில், மகன் தீ வைத்து எரித்ததில் தீக்காயமடைந்த தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செங்கல்ப ட்டு, நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர், 65. இவரது மகன் விக்டர் ராஜேந்திரன், 45. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் ஆத்துாரில் வசிக்கிறார். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதியிலுள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், விக்டர் ராஜேந்திரன் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு, செங்கல்பட்டில் உள்ள தாய் எஸ்தர் வீட்டிற்கு வந்த விக்டர் ராஜேந்திரன், மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த விக்டர் ராஜேந்திரன், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை, எஸ்தர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். எஸ்தரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலின்படி சம்பவ இடத்திற்குச் சென்ற செங்கல்பட்டு நகர போலீசார், விக்டர் ராஜேந்திரனை கைது செய்து, விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். 50 சதவீத தீக்காயமடைந்த எஸ்தருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.