மேலும் செய்திகள்
பஸ் மோதி அக்கா கண் முன் தங்கை பலி
14 hour(s) ago
ஆளில்லா வீடு தீப்பற்றி எரிந்து நாசம்
14 hour(s) ago
1,958 கிலோ ‘குட்கா’ பறிமுதல்
16 hour(s) ago
சென்னை, :காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், சென்னை இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணியில், தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அத்திட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலிலும், நிலம் கையகப்படுத்தும் பணியை, அரசு முடுக்கிவிட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில், பயணியரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. வர்த்தகம், தொழில், சுற்றுலா போன்ற துறைகளில், தமிழகம் மேலும் வளர்ச்சி அடையவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அதிக பயணியர் மற்றும் சரக்குகளை கையாளும் திறனில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.இப்புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.இந்திய விமான நிலைய ஆணையத்தின் சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில், புதிய விமான நிலையம் அமைக்க, காஞ்சிபுரம், பரந்துாரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அங்கு, அடுத்த 35 ஆண்டுகளுக்கு விமான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், ஆண்டுக்கு 10 கோடி பயணியரை கையாளும் வகையிலும், பரந்துார் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில் 5,400 ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.விமான நிலையம் அமைக்க விரிவான தொழில்நுட்பம் மற்றும் செலவு குறித்த ஆய்வை, ஒப்பந்த நிறுவனம் வாயிலாக டிட்கோ முடித்தது. அந்த அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்து, அனுமதி கேட்டுள்ளது.பரந்துார் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்பான முதல் அறிவிப்பு, கடந்த மாதம் 24ல் வெளியானது. அதன்படி முதலாவதாக, பொடவூர் கிராமத்தில், 218 நபரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.லோக்சபா தேர்தல் அறிவிப்பு, இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாக உள்ளது. இருப்பினும், இரண்டாம் கட்டமாக, சிறுவல்லுார் கிராமத்தில், 259 பேரிடம் இருந்து, 43 ஏக்கர் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கையகப்படுத்த வேண்டிய, 3,750 ஏக்கரும், மூன்று மண்டலங்களாக பிரித்து நிலம் வாங்கப்படும். ஒவ்வொரு முறையும், 200 ஏக்கர் - 300 ஏக்கர் என, நிலம் வாங்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.சந்தை மதிப்பில் 1 ஏக்கர் நிலம் 15 லட்சம் ரூபாயாக உள்ளது. ஆனால், அரசு அறிவித்தபடி, அதற்கு கூடுதலாக இரண்டரை மடங்கு இழப்பீடு வழங்கப்படும். ஆறு மாதங்களில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
'டிட்கோ' அறிவுசார் நகரம்திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில், சர்வதேச தரத்திலான கல்வியை மையமாக வைத்து, அறிவுசார் நகரத்தை உருவாக்க டிட்கோ திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட செலவாக 200 கோடி ரூபாய் என வரையறுக்கப்பட்டுள்ளது. அறிவுசார் நகரத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முன்னணியில் உள்ள பல்கலை, திறன் மையங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தங்களின் கட்டுமானங்களை அமைக்கலாம். இத்திட்டத்திற்கு தமிழக அரசு, 2023 அக்டோபரில் ஒப்புதல் அளித்தது.அறிவுசார் நகரத்திற்கு, ஊத்துக்கோட்டை அருகில் உள்ள ஏனம்பாக்கம், மேல்மாளிகைப்பட்டு, செங்காத்துக்குளம், எர்ணாங்குப்பம் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில், 1,703 ஏக்கர் தேவை.முதற்கட்டமாக, ஊத்துக்கோட்டை தாலுகாவில், செங்காத்துக்குளம் கிராமத்தில், 63 நபரிடம் இருந்து 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக, அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் ஒரு மாதத்திற்குள், ஊத்துக்கோட்டையில் உள்ள, சிப்காட் மாநெல்லுார் - 3 சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். ஏப்., 25ம் தேதி விசாரணை நடத்தி, நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
14 hour(s) ago
14 hour(s) ago
16 hour(s) ago