விதிமீறல் அபராதம் கட்டினால்தான் இனி இன்சூரன்ஸ்... கிடுக்கிப்பிடி ரூ.300 கோடியை வசூலிக்க போலீசார் நடவடிக்கை
சென்னையில், விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள் கட்டாமல் உள்ள அபராதத் தொகை, 300 கோடியை தாண்டியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு கிடுக்கப்பிடி போடும் வகையில், அபராதத்தை செலுத்தினால்தான், வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னையில் போலீசார் அமல்படுத்தி உள்ளனர். சென்னையில் வாகனங் களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், விதிமீறல் சம்பவங்களும் அதிகம் நடக்கின்றன. விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். நேரடி அபராத நடைமுறை மட்டுமின்றி, ஆங்காங்கே அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்கப்படுகிறது. அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மீறுதல், 'ஹெல்மெட்' அணியாமல் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத தொகையை போக்குவரத்து போலீசாரிடம் உள்ள கருவி வாயிலாகவும், பே.டி.எம்., செயலி, தபால் நிலையம் வாயிலாகவும் செலுத்த முடியும். ஆனால், ஏராளமான வாகன ஓட்டிகள், அபராதத்தை ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல், 'டிமிக்கி' கொடுத்து வருகின்றனர். இந்த அபராதத் தொகையை வசூலிக்க, ஒவ்வொரு போக்குவரத்து உதவி கமிஷனர் அலுவலகத்திலும் அமைக்கப் பட்டுள்ள, 'கால் சென்டர்' ஊழியர்கள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பலரும் அபராதத் தொகையை செலுத்த முன்வராததால், 300 கோடி ரூபாய்க்கு மேல் அபராதத் தொகை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், விதி மீறல்களை தடுக்கவும், வீதிமீறல் செய்த இருசக்கர வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தவும், கிடுக்கிப்பிடி நடவடிக்கையாக புதிய நடை முறையை, சென்னை போலீசார் நடைமுறைப்படுத்தி உள்ளனர். வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாலை விதிமீறலில் ஈடுபட்டு அபராத தொகையை செலுத்தாத வாகனங்களுக்கு, இனி இன்சூரன்ஸ் கட்டணத்துடன் அபாரதத் தொகையையும் செலுத்தும் வகையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து, போக்குவரத்து உதவி கமிஷனர் பாஸ்கர் கூறியதாவது: 'பரிவாஹன்' எனும் செயலி மற்றும் இணையதளத்துடன், அனைத்து வகையான இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இன்சூரன்ஸ் நிறுவன ஆன்லைன் பக்கத்தில், வாகன எண்ணை உள்ளீடு செய்து இன்சூரன்சை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு அபராத தொகை செலுத்தப்படாமல் இருந்தால், அதை உடன டியாக செலுத்தும் படி அறிவுறுத்தப்படும். நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே, இன்சூரன்சை புதுப்பிக்க முடியும். நேரடியாக சென்றாலும், ஆன்லைன் மூலம் புதுப்பிக்க முயன்றாலும், அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே இனி இன்சூரன்சை புதுப்பிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -