மயிலை, பரங்கிமலை, இரும்புலியூரில் விதிமீறிய கட்டடங்கள் அகற்ற உத்தரவு
சென்னை, சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு பகுதிகளில், விதிமீறல் கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கட்டடங்கள் மீது சி.எம்.டி.ஏ., உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த, எல்சியஸ் பெர்னான்டோ என்பவர், விதிமீறல் கட்டடங்கள் குறித்து, சி.எம்.டி.ஏ., மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் புகார் அளித்தார்.அதில், சென்னை, மயிலாப்பூர் அபிராமபுரம் பகுதியில், 1.55 ஏக்கர் புறம்போக்கு நிலம், பரங்கிமலையில், 75 ஏக்கர் இனாம் நிலம் உட்பட, 130 ஏக்கர் அரசு நிலம், தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில், 53.14 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களில், குறிப்பிட்ட சில கிறிஸ்தவ அமைப்புகள், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். இப்புகார்கள் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், 'இந்த நிலங்களில் எவ்வித கட்டுமான திட்டங்களுக்கும் நாங்கள் அனுமதி வழங்கவில்லை. மேலும், இது போன்ற விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது' என சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, சென்னை மாநகராட்சி, பரங்கிமலை கன்டோன்மென்ட் நிர்வாகம், தாம்பரம் மாநகராட்சி ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.