பயணியர் வாகன கண்காட்சி நந்தம்பாக்கத்தில் நிறைவு
சென்னை:நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில், மூன்று நாட்கள் நடந்த பயணியர் வாகன கண்காட்சி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில், 'பயணியர் வாகன கண்காட்சி - 2.0' ஜூலை 31ல் துவங்கியது. இதில் பயணியர் போக்குவரத்துக்கான பல்வேறு நிறுவனங்களின் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பல நிறுவனங்கள், தனி நபர்கள் இங்கு வந்து புதிய வகை வாகனங்கள் குறித்த விபரங்களை பெற்றனர். மேலும், புதிய வகை வாகனங்கள் வாங்குவதற்கான பேச்சும் நடந்தது. இந்த கண்காட்சியில், எஸ்.ஆர்.எம்.பி.ஆர்., ஆட்டோ டெக், அசோக் லைலாண்ட், மகேந்திரா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தின. புதிய தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட வாகனங்களை பார்வையிட, ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் குவிந்தனர். எஸ்.ஆர்.எம்.பி.ஆர்., நிறுவனத்தின் சார்பில், மூன்று முக்கிய வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து, பணியாளர்களுக்கான ஸ்டாப் பேருந்து, சிறப்பு வசதிகளுடன் கேரவன் ஆகிய வாகனங்கள், இதன் வடிவமைப்பு, பாதுகாப்பு வசதிகள் குறித்து, பலதரப்பினரும் அறிந்து கொண்டனர். இந்த கண்காட்சியில், எஸ்.ஆர்.எம்.பி.ஆர்., குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து நேரில் பங்கேற்று, முன்னணி நிறுவனங்களின் வாகனங்களை பார்வையிட்டார். அவற்றின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து கேட்டறிந்து பாராட்டினார். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், நிறுவன பிரதிநிதிகளுக்கு பரிசுகளை அவர் வழங்கினார்.