உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சுனாமி நினைவு தினம் : கடலில் மலர் துாவி மக்கள் அஞ்சலி

 சுனாமி நினைவு தினம் : கடலில் மலர் துாவி மக்கள் அஞ்சலி

திருவொற்றியூர்:சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, வடசென்னை கடற்கரை பகுதிகளில், அரசியல் கட்சியில், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ல் சுனாமி பேரலையின் கோர தாண்டவத்தில், மீனவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர், தமிழகத்தில் பலியாகினர். உறவுகளையும், உடமைகளையும் இழந்து கடலோர மக்கள் தவித்தனர். இதன், 21வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வில்லை. காசிமேடு, திருவொற்றியூர் கடற்கரையில் மலர் துாவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பைபர் படகில், காசிமேடு பகுதியில் கடலில் சென்று, பால் ஊற்றி, மலர் துாவி, உயர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தினார். அ.தி.மு.க., சார்பில், வடகிழக்கு மாவட்ட செயலர் ராஜேஷ் தலைமையில், மாவட்ட செயலர்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, விருகை ரவி உட்பட, 500க்கும் மேற்பட்டோர் அமைதி பேரணியாக சென்று, காசிமேட்டில் மலர்துாவியும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். திருவொற்றியூர் திருவொற்றியூரில், தி.மு.க., சார்பில், ஏராளமான பெண்கள் பங்கேற்ற அமைதி பேரணி நடந்தது. இதில், தி.மு.க., துணை பொது செயலர் ராசா, மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம், தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர் உட்பட பலர்,கடலில் பால் ஊற்றியும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர். பின், மீனவர்களுக்கு, 70 இஞ்சின்கள், தலா ஒரு படகு, ஆட்டோ, 25 தையல் இயந்திரங்கள், 20 இஸ்திரி பெட்டிகள், மூன்று மடிக்கணினி, 2,000 பேருக்கு அரிசி மூட்டைகள் உட்பட, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் நினைவு தின நிகழ்வுகள் நடந்தன. வீடு கேட்டு மீனவர்கள் முற்றுகை போராட்டம் திருவொற்றியூர்: சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து 21 ஆண்டுகளாகியும், அரசு வீடு வழங்கவில்லை எனக்கூறி, 100க்கும் மேற்பட்டோர் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சுனாமியின்போது காசிமேடு பகுதியில் வீடுகளை இழந்த, 158 பேருக்கு இதுவரை வீடு வழங்கப்படவில்லை என, கூறப்படுகிறது. இந்நிலையில், சுனாமி நினைவு தினமான நேற்று, காசிமேடில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை, 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திருவொற்றியூர் கார்கில் நகரில் உள்ள, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பிற்கு சென்று, அங்கும் வீடு கோரி போராட்டம் நடத்தினர். போலீசாரும், வாரிய அதிகாரிகளும் பேச்சு நடத்தி, விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்