கிண்டி, அடையாறு மண்டலம், 172வது வார்டு, வேளச்சேரி, ஐந்து பர்லாங் சாலையில், அசோக் லேலண்டு நிறுவனத்தின் இடம் உள்ளது.இதில், ஏழு மாடி உடைய அடுக்குமாடி கட்டடத்தை, 'கிரீன் டெக்' என்ற கட்டுமான நிறுவனம் கட்டுகிறது. இதற்காக, பள்ளம் எடுத்து பணி நடந்து வந்தது.கடந்த டிச., 4ம் தேதி, 'மிக்ஜாம்' புயலில் கனமழை பெய்தது. இதில், கன்டெய்னர் நிழற்குடையின் ஒரு பகுதி மற்றும் அருகில் உள்ள 'காஸ்' நிரப்பும் நிறுவனத்தின் ஒரு பகுதி, பள்ளத்தில் விழுந்தது.இதோடு, ஆறாக ஓடிய மழைநீர், பள்ளத்தை நிரப்பியது. சாலையின் ஒரு பகுதியும் சரிந்து, ராட்சத பள்ளமாக மாறியது.இச்சம்பவத்தால், 60 அடி அகலம் உடைய பேருந்து சாலையான, ஐந்து பர்லாங் சாலை மூடப்பட்டது. முக்கிய பிரதான சாலையானதால், திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.கிண்டி போலீசார், தண்ணீரை வெளியேற்றி முழுமையாக ஆய்வு செய்தபின், பள்ளத்தை மூடும் பணியை துவங்கலாம் என கூறினர். ஆனால், நீரூற்று அதிகரித்ததால், 30 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இந்நிலையில், போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகள் தலைமையில், மாநகராட்சி, குடிநீர், வாரியம், வருவாய், சட்டம் - ஒழுங்கு காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை, சமீபத்தில் ஆய்வு செய்தனர். பின், பள்ளத்தை மூடி சாலையை திறக்க முடிவு செய்யப்பட்டது.இதன்படி, பள்ளம் மூடும் பணி நடக்கிறது. மீண்டும் மண் சரிவு ஏற்படாமல் இருக்க, சாலைக்கும், தனியார் இடத்திற்கும் இடையே சாய்வு தடுப்பு அமைத்து, மண் கொட்டி நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதிக திறன் மோட்டார் வைத்து தண்ணீர் இறைக்கப்படுகிறது. மொத்த பணியையும், இம்மாதம் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, கட்டுமான நிறுவனத்திடம், அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து, இம்மாதம் இறுதிக்குள் சாலை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.