ஆக்கிரமிப்பு கடைகள் ஓ.எம்.ஆரில் அகற்றம்
சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆரில், 20 கி.மீ., துாரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, சோழிங்கநல்லுார் சந்திப்பில், நடைபாதை, மேம்பால சாலை மற்றும் இரண்டு அடுக்கில் மெட்ரோ ரயில் நிலையம் என, 100 அடி உயரத்தில் கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளது. இதற்காக, சுற்றியுள்ள இடங்களில் நில ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. ஆனால், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் மெட்ரோ ரயில் பணியில் தாமதம் ஏற்பட்டதுடன், போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இதனால், மெட்ரோ ரயில் நிர்வாகம், போலீசார் உதவியை நாடியது. இதையடுத்து, சோழிங்கநல்லுார் சந்திப்பில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை, போலீசார் மற்றும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் முன்னின்று அகற்றினர். சில கடைகளை அகற்ற, அரசியல் கட்சியினர் இடையூறு செய்துள்ளனர். அவர்கள் மீது, வழக்கு பதிவு செய்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசல் தடுக்கப்படும் என, போலீசார் கூறினர்.