வேளச்சேரி- - தரமணி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
தரமணி :வேளச்சேரி, விஜயநகர் - -தரமணி, 100 அடி சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள், கிடங்குகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், தனியார் மருத்துவமனை, வங்கி உள்ளிட்டவை உள்ளன.மீடியன் வசதியுடன் கூடிய இச்சாலையில், தண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம், தனியார் ஆம்னி பேருந்து வாகனங்களின் பார்க்கிங்கிற்கு விடப்பட்டுள்ளது. இதனால், இச்சாலை, இரவு, பகல் என, 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்தது.இந்த சாலையின் இருபுறமும் உள்ள கடைகள், முகப்பு பகுதியை ஐந்து முதல் எட்டு அடி துாரத்திற்கு விரிவாக்கம் செய்துள்ளன. மேலும், தங்களின் பொருட்களை சாலையில் கிடத்தி வைக்கின்றனர்.இதனால், தார் சாலை தவிர மற்ற இடங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் சென்று விடுகின்றன. இதனால், பீக் -அவர்ஸ் நேரங்களில், ராஜிவ்காந்தி சாலைக்கு சென்று வரும் அதிகப்படியான வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிரது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.குறிப்பாக, தரமணி பகுதியில் தான், இந்த ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், ஆக்கிரமிப்பு குறித்த புகார்கள் வரும்போது மட்டும், அவை அகற்றப்படுவது வாடிக்கையாக உள்ளது.இந்நிலையில், சமீப காலமாக ஆக்கிரமிப்பு குறித்த புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து, கடைகளின் விரிவாக்க ஆக்கிரமிப்பு, சாலையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த பொருட்களை முழுமையாக அகற்றி, கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.