வணிக உரிம கட்டணம் 5 மடங்கு உயர்வு மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
சென்னை:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசு உள்ளாட்சி துறை மூலமாக கடைகளுக்கு வணிக உரிமம் ரூபாய் 650 ரூபாயாக இருந்த கட்டணத்தை 3,050 ரூபாய் என, ஐந்து மடங்கு உயர்த்தி உள்ளது. அதையும் மூன்று ஆண்டுகளுக்கு இப்போதே கட்ட வேண்டுமென நிர்பந்திக்கின்றனர்.சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தி உள்ள நிலையில், சென்னை மாநகராட்சியால் என்போஸ்மென்ட் வாயிலாக கடைகளுக்கு 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து வணிகர்களிடம் வசூலிக்கின்றனர்.ஏற்கனவே மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு கொள்கை மற்றும் ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றால் சில்லறை வணிகமும், தொழில் துறையும் பாதிப்படைந்து லட்சக்கணக்கான வணிகர்கள் வணிகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.தமிழக அரசு வணிக உரிமை கட்டணத்தையும், சொத்து வரியையும் உயர்த்தி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக வணிகர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து வணிக உரிம கட்டணத்தையும், சொத்து வரி உயர்வையும் குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.