6 பேர் கும்பலால் வெட்டப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி பலி
பல்லாவரம், பல்லாவரம், மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார், 25; பெயின்டர். இவர் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த இவர், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியை சேர்ந்த சிலரை அருண்குமார் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் நண்பர்கள் இருவருடன், அருண்குமார் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கும்பல், அருண்குமாரை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பியது. இதில் படுகாயமடைந்த அருண்குமாரை, அவரது நண்பர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று உயிரிழந்தார். பல்லாவரம் போலீசார் வழக்கு பதிந்து, இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.