உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்ரீ சாய்ராம் இன்ஜி., கல்லுாரி 26வது பட்டமளிப்பு விழா

ஸ்ரீ சாய்ராம் இன்ஜி., கல்லுாரி 26வது பட்டமளிப்பு விழா

சென்னை: ''வரும் 2047ம் ஆண்டுக்குள், வளர்ந்த நாடாக இந்தியா மாற, தொழில்நுட்பக் கல்வி அவசியம்,'' என, தைரோ கேர் டெக்னாலஜி நிறுவனர் வேலுமணி தெரிவித்தார். சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள, ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் கல்லுாரியின், 26வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில், நேற்றுமுன்தினம் நடந்தது. சாய்ராம் குழும முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து தலைமை வகித்தார். விழாவில், தைரோகேர் டெக்னாலஜி நிறுவனர் வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். விழாவில், 1,262 இளநிலை, முதுநிலை மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. படிப்பில் சிறந்து விளங்கிய, மாணவ, மாணவியருக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில், தைரோகேர் டெக்னாலஜி நிறுவனர் வேலுமணி பேசியதாவது: வரும் 2047ம் ஆண்டுக்குள், வளர்ந்த நாடாக இந்தியா மாற, தொழில்நுட்பக் கல்வி அவசியம். இதற்கு, சாய்ராம் கல்வி நிறுவனம் தன் பங்கை சிறப்பாக ஆற்றி வருகிறது. உலகம் இந்தியர்களை நம்பி இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளும் உங்களை சார்ந்து உள்ளன. தொழில்கள் துவங்க பணம் முக்கியம் அல்ல, தொழில்நுட்ப அறிவால், அதை சாதித்துவிடலாம். இவ்வாறு அவர் பேசினார். சாய்ராம் கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி லியோ முத்து பேசுகையில், ''சாய்ராம் கல்வி குழுமம், தேசிய தர வரிசை பட்டியலில், 157வது இடம் பெற்று, இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக செயல்படுகிறது. ''கல்வியில், சிறந்து விளங்கும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும், லியோ முத்து உதவித் தொகை என்ற பெயரில், 2 கோடி ரூபாய் வழங்கப் படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி