கோயம்பேடு சந்தை சாலையில் மதுக்கூடமாகும் தெருவோர கடைகள்
கோயம்பேடு,: கோயம்பேடு சந்தை மற்றும் நெற்குன்றம் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக, 'மார்க்கெட் - ஏ' சாலை உள்ளது. இவ்வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இச்சாலையில், மின் வாரிய அலுவலகம், போலீஸ் பூத், டாஸ்மாக் கடை, தனியார் வாகன நிறுத்தம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. சாலையோரத்தில் தள்ளுவண்டி உணவு கடைகள் ஏராளமாக உள்ளன.கோயம்பேடு சந்தையில் பணி செய்யும் தொழிலாளர்கள், தள்ளுவண்டி கடையில் உணவு அருந்தி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன், ஐந்துக்கும் குறைவான கடைகளே இருந்த நிலையில், தொடர்வண்டி போல் தள்ளுவண்டி கடைகள் வரிசை கட்டி நிற்கின்றன.மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் தள்ளுவண்டி கடைகளில் அமர்ந்து, சமூக விரோதிகள் மது அருந்துகின்றனர். இதனால், குற்றச்செயல்கள் நடக்க வாய்ப்பு அதிகம். 'கடைகள் அமைக்க அனுமதியளித்தது யார்?' என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல, கடைகளை முறைப்படுத்துவதுடன் தரமான முறையில் உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.