உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீஞ்சூரில் டேங்கர் லாரி வெடித்து விபத்து வெல்டிங் பணியின்போது விபரீதம் லாரி ஓட்டுநர் உட்பட சிலர் அட்மிட்

மீஞ்சூரில் டேங்கர் லாரி வெடித்து விபத்து வெல்டிங் பணியின்போது விபரீதம் லாரி ஓட்டுநர் உட்பட சிலர் அட்மிட்

மீஞ்சூர், :மீஞ்சூரில் வெல்டிங் பணியின்போது, டேங்கர் லாரி வெடித்து சிதறிய விபத்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் சமையல் 'காஸ்' மற்றும் பெட்ரோலிய முனையங்கள் உள்ளன. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, டேங்கர் லாரிகள் மூலம் காஸ் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர், 45 என்பவரின் டேங்கர் லாரி, பாரத் நிறுவன 'பங்க்'குகளுக்கு பெட்ரோல் வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நேற்று காலை, டேங்கர் லாரியில் ஏற்பட்டிருந்த விரிசலை சரிசெய்வதற்காக, அத்திப்பட்டு புதுநகரில் உள்ள பட்டறையில் வெல்டிங் பணி மேற்கொள்ளப்பட்டது. லாரியில் பெட்ரோலிய பொருட்கள் ஏதும் இன்றி காலியாக இருந்தது. ஆனால், வெல்டிங் செய்தபோது உஷ்ணம் அதிகரித்து, திடீரென டேங்கரின் மேல் பகுதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிலிருந்த இரும்பு தளவாடங்கள் தனித்தனியாக சிதறி விழுந்தன. இதனால், அருகில் இருந்த கட்டடங்கள் அதிர்வடைந்தன. அருகே இருந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் அலறியடித்து வெளியே ஓடினர். அதிர்ஷ்டவசமாக வெல்டிங் தொழிலாளி மற்றும் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், அருகில் இருந்த உணவகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் நான்கு பேர், அதிர்ச்சியில் மயங்கியதை தொடர்ந்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். உணவகத்தில் இருந்த பொருட்கள் மற்றும் 'மாருதி டிசையர்' கார் ஒன்றும் அதிர்வில் சேதமாகின. இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை