வாலிபர் குத்தி கொலை கொலையாளிகள் சரண்
சென்னை:சேத்துப்பட்டில் வாலிபரை கொலை செய்து, கூவம் ஆற்றோரம் முட்புதரில் உடலை வீசி சென்ற மூவர், போலீசில் சரண் அடைந்தனர். சேத்துப்பட்டு, மேத்தா நகர் கூவம் ஆற்றோரம் மாநகராட்சி துாய்மை பணியாளரான விஜயகுமார், நேற்று காலை 7:30 மணியளவில் துாய்மை பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது, முட்புதரில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், வாலிபர் உடல் கிடந்துள்ளது. இது குறித்து காவல் கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சேத்துப்பட்டு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் பெரம்பூர் லோகோ பகுதியைச் சேர்ந்த சாய்நாத், 21 என்பது தெரியவந்தது. இந்த நிலையில், காலை 11:00 மணியளவில், சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு வந்த பரத், அன்பரசு, குட்டி விஜய், 18, ஆகிய மூவரும், 'நாங்கள் தான் சாய்நாத்தை கொலை செய்தோம்' எனக்கூறி சரண் அடைந்தனர். கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் மூவரிடமும் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சாய்நாத் மீது, ஒரு கொலை வழக்கு உட்பட, ஐந்து வழக்குகள் உள்ளன.