ரூ.75,000 இழப்பீடு வழங்க சுற்றுலா நிறுவனத்திற்கு உத்தரவு
சென்னை;' கைலாஷ் யாத்திரை ரத்தான விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 75,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, சுற்றுலா நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்தவர் ராமநாதன், 65; ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. இவர், செ ன்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நானும், என் மனைவியும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்காக, கடந்த 2023ம் ஆண்டு கோயம்பேடில் உள்ள 'யாத்திரை.காம்' எனும் சுற்றுலா நிறுவனத்திடம் 20,000 ரூபாய் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தோம். மத்திய அரசு அனுமதி அளிக்காததால், இந்த யாத்திரை ரத்து செய்யப் பட்டது. இதனால் பதிவு கட்டணத்தை திரும்ப வழங்க கோரினோம். முன்பணம் மத்திய அரசுக்கு செலுத்தப்பட்டு விட்டதால், திரும்ப பெற இயலாது என, சுற்றுலா நிறுவனம் கூறியது. இழப்பீட்டு தொகையுடன் செலுத்திய முன் பணத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை, ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஆணைய ம் பிறப்பித்த உத்தரவு: 'கைலாஷ் யாத்திரையை மீண்டும் துவங்குவதை, இந்திய மற்றும் சீன அரசுகள் உறுதிப்படுத்தா த நிலையில், கைலாஷ் யாத்திரைக்காக மக்களை கவர்ந்திழுக்கும் வகையில், சுற்றுலா நிறுவனம் விளம்பரத்தை வெளியிட்டு பணம் வசூலித்து, நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. எனவே, பதிவு கட்டணம் 20,000 ரூபாயை, மனுதாரருக்கு சுற்றுலா நிறுவனம் திரும்ப வழங்க வேண்டும். சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தகத்தை மேற்கொண்டதற்காக, இழப்பீடாக 50,000 ரூபாய் மற்றும் வழக்கு செலவுக்காக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.