உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராமாபுரம் பாரதி சாலையில் ஆக்கிரமிப்பு போக்குவரத்து நெரிசலால் தவிப்பு

ராமாபுரம் பாரதி சாலையில் ஆக்கிரமிப்பு போக்குவரத்து நெரிசலால் தவிப்பு

ராமாபுரம், ராமாபுரம் பாரதி சாலையில் தனியார் கல்லுாரி அருகே சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரத்தில், நெசப்பாக்கம், சின்ன போரூர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக, பாரதி சாலை உள்ளது. நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்த இச்சாலை, தற்போது மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது. இச்சாலையில், ராமாபுரம் காவல் நிலையம், தனியார் கல்லுாரி ஆகியவை அமைந்துள்ளதால், எந்நேரமும் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். ஆற்காடு சாலை மற்றும் மவுன்ட் -பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், நெசப்பாக்கம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, வாகன ஓட்டிகள் பாரதி சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், சமீப காலமாக இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. தனியார் கல்லுாரி முன், அங்கு பயிலும் மாணவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையின் இருபுறம் வரிசை கட்டி 'பார்க்கிங்' செய்கின்றனர். இதனால், சாலை குறுகலாகி நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பாரதி சாலை, நாயுடு சாலை, கம்பர் சாலை, வெங்கடேஷ்வரா நகர் சாலை ஆகிய சந்திப்புகளில், காலை மற்றும் மாலை நேரங்களில், வழி விடாமல் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி நிற்பதால், அப்பகுதியை கடக்க, அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இந்த நெரிசலை கட்டுப்படுத்த இங்கு போக்குவரத்து போலீசாரும் பணியில் ஈடுபடுவதில்லை. வளசரவாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் போதிய போக்குவரத்து காவலர்கள் இன்றி ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய, இச்சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்துவதுடன், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி