162 சவரன் அடகு வைத்து ரூ.90 லட்சம் மோசடி வங்கி ஊழியர்கள் இருவர் கைது; மாஜி மேலாளருக்கு வலை
சைதாப்பேட்டை, வாடிக்கையாளரின் 162 சவரன் நகைகளை, வெவ்வேறு நபர்களின் கணக்குகளில் அடகு வைத்து, 90 லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி ஊழியர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான, முன்னாள் மேலாளரை தேடி வருகின்றனர். சைதாப்பேட்டை, வி.ஜி.பி., சாலையைச் சேர்ந்தவர் சுலைமான், 32; தனியார் நிறுவன ஊழியர். இவர், கிண்டி, லேபர் காலனியில் உள்ள 'கத்தோலியன் சிரியன்' வங்கியில், சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இதனால், வங்கி மேலாளர் சாமிநாதனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 2ம் தேதி 'நகை அடகு வைக்க வேண்டும்' என, வங்கி மேலாளர் சாமிநாதனை மொபைல் போனில் தொடர்பு கொண்டு சுலைமான் தெரிவித்துள்ளார். 'வங்கிக்கு நீங்கள் வர வேண்டாம், நானே ஊழியரை அனுப்பி உதவி செய்கிறேன்' என, சாமிநாதன் கூறி உள்ளார். அவர், வங்கி காசாளர் பிரசாத் என்பவரை சுலைமான் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கு சுலைமான் கொடுத்த, 162 சவரன் நகைகள் மற்றும் வங்கி படிவத்தில் கையெழுத்து வாங்கி சென்றார். பின் சாமிநாதனை தொடர்பு கொண்டு பணம் கேட்டபோது, 'சர்வர் வேலை செய்யவில்லை; ஆடிட்டிங் நடக்கிறது' என, காலம் தாழ்த்தி வந்துள்ளார். அவரது பேச்சில் சந்தேகம் ஏற்படவே, சுலைமான் வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது, பண மோசடியில் ஈடுபட்டதால் சாமிநாதன் 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சுலைமான், இது குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், சுலைமான் கொடுத்த நகைகளை, சாமிநாதன் பல நாட்களாக பயன்படுத்தப்படாமல் உள்ள வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் அடகு வைத்து, 90 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவருக்கு உடந்தையாக இருந்த வங்கி காசாளர் பிரசாத், 25, வங்கி ஆப்ரேட்டிங் மேலாளர் திவாகர், 32, ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான வங்கி முன்னாள் மேலாளர் சாமிநாதனை போலீசார் தேடி வருகின்றனர்.