வீடு புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் பணம் பறிப்பு
செம்மஞ்சேரி, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பாபுல்மியா, 24; ஐ.டி., நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி தான்ஜினாகர், 22.இவர்கள், சோழிங்கநல்லுார், நேரு நகரில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, பாபுல்மியா பணிக்கு சென்றார். தான்ஜினாகர் வீட்டில் தனியாக இருந்தார்.இந்த நிலையில், நள்ளிரவில் கதவை தட்டி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், தான்ஜினாகரின் கழுத்தில் கத்தியை வைத்து, பணம் கேட்டுள்ளனர். அவர் இல்லை எனக்கூறவே, 'கணவரிடம் பேசி அனுப்ப சொல்' என மிரட்டியுள்ளனர்.பின், பாபுல்மியாவிடம் மொபைல் போனில் பேசிய மர்ம நபர்கள், 'பணம் அனுப்பவில்லை என்றால், உன் மனைவியை கொன்று விடுவோம்' என மிரட்டி உள்ளனர். உடனே பாபுல்மியா, அவர்கள் கூறிய மொபைல் போன் எண்ணிற்கு, 'ஜிபே' வாயிலாக 8,000 ரூபாய் அனுப்பியுள்ளார். பணம் வந்ததை உறுதி செய்து, 'வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம்' என, மிரட்டி இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.இது குறித்து விசாரிக்கும் செம்மஞ்சேரி போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.