பஸ் மோதி பைக் தீக்கிரை வாலிபர் பலி
திருவள்ளூர்: அரசு பேருந்து மோதிய விபத்தில், பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்திவாசன், 25. ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 'ஹீரோ ஹோண்டா பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ரகுநாதபுரம் அருகே, சென்னை - திருப்பதி நோக்கி சென்ற தடம் எண் '201' என்ற அரசு பேருந்து, முன்னே சென்ற கீர்த்திவாசனின் வாகனத்தின் மீது மோதியது. இதில், பேருந்தின் அடியில் பைக் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதால், பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் மற்றும் பயணியர், எரிந்து கொண்டிருந்த பைக்கை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். படுகாயமடைந்த கீர்த்திவாசனை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்களின் பரிசோதனையில், கீர்த்திவாசன் உயிரிழந்தது தெரியவந்தது.