ராயபுரத்தில் தியேட்டர் எதிரில் வாலிபருக்கு சரமாரி வெட்டு
ராயபுரம்,ராயபுரத்தில், தியேட்டர் எதிரில் வாலிபரை சரமாரியாக வெட்டி கொல்ல முயன்ற கும்பல் கைது செய்யப்பட்டது. தண்டையார்பேட்டை, விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 25. இவர், நேற்று ராயபுரம் ஐட்ரீம்ஸ் தியேட்டர் எதிரில் பைக்கில் நின்றிருந்தபோது, பைக்கில் வந்த மர்ம கும்பல், ராஜ்குமாரை சரமாரியாக வெட்டி தப்பியது. இதில் படுகாயமடைந்த ராஜ்குமாரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ராயபுரம் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், ராஜ்குமாருக்கும், ஹரிஹரன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததும் ஹரிஹரன் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ராஜ்குமாரை கொல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட, புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி.நகரைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஹரிஹரன், 18, புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்த கோகுல், 20, தண்டையார்பேட்டை, திடீர் நகரைச் சேர்ந்த சுபாஷ், 20, நிர்மல், 19, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.