உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் நகை திருட்டு: கைரேகை நிபுணர் பதிவு

முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் நகை திருட்டு: கைரேகை நிபுணர் பதிவு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்துள்ள அரசம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் 45 பவுன் நகைகள் மற்றும் மூன்று லட்சம் ரூபாய் திருடுபோனது. கை ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜ்(64). இவர் தி.மு.க., கிளை தலைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி வேல்மணி (55) முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். இவர்களது பேரன் கிருத்தீஸ்க்கு (3) திருப்பூர் அருகேயுள்ள முத்தண்ணம்பாளையத்தில் உள்ள குலவ தெய்வமான அங்களாம்மன் கோவிலில் மொட்டையடிப்பதற்காக கடந்த 9ம் தேதியன்று மாலை 5.00 மணிக்கு கிளம்பி சென்றனர். மறுநாள் 10ம் தேதி மாலை 5.00 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மூன்று அறைகளின் கதவுகள் திறந்து இருந்தன.இதில், பெட்ரூமிற்குள் சென்று பார்த்த போது, வீட்டின் மேல் இருந்த சிமென்ட் சீட்டை உடைத்து, அதற்குகீழ் தெர்மாகோல் சீலிங்கை கட் செய்து, மர்ம நபர்கள் வீட்டிற்குள் இறங்கி, பீரோவை உடைத்து, உள்ளே இருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் மூன்று லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.நடராஜ் கொடுத்த புகாரின்பேரில், கோவை எஸ்.பி., உமா மேற்பார்வையில், ஏ.டி.எஸ்.பி., அண்ணாதுரை, பேரூர் டி.எஸ்.பி., சண்முகம், ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.பின், கைரேகை நிபுணர் பெருமாள்சாமி வீட்டின் பல்வேறு பகுதிகளிலும், பீரோவிலும் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்துள்ளார். இதில், கொள்ளையடிக்கப்பட்ட மர்ம நபர்களின் கைரேகைகளின் பதிவு ஏற்கனவே கொள்ளையில் ஈடுப்பட்ட பழைய திருடர்களின் பதிவுடன் ஒத்துபோகலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.பேரூர் டி.எஸ்.பி., சண்முகம் தலைமையில், மதுக்கரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன், கிணத்துக்கடவு சப்-இன்ஸ்பெக்டர்கள் நீதிபதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ