உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.எச்.,க்கு தடையில்லா மின்சாரம் வழங்க ...கூடுதல் நிதி ஒதுக்கீடு!நிலுவை பணிகளை தீவிரப்படுத்த திட்டம்

ஜி.எச்.,க்கு தடையில்லா மின்சாரம் வழங்க ...கூடுதல் நிதி ஒதுக்கீடு!நிலுவை பணிகளை தீவிரப்படுத்த திட்டம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு, 'டிரான்ஸ்பார்ம்' அமைக்க, 35 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான ஆணை வந்ததும் பணிகள் விரைவில் துவங்கப்படும், என, டாக்டர்கள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, கடந்த 2009ம் ஆண்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, 462 உள்நோயாளிகளும், தினமும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவனைமயில் உள்ள நான்கு அறுவை சிகிச்சை அரங்குகளில், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.மேலும், 'சி.டி., ஸ்கேன், எக்ஸ்-ரே போன்ற உபகரணங்களும் உள்ளன. இந்நிலையில், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

பணி நிறுத்தம்

அரசு மருத்துவமனையில், குறைந்த மின் அழுத்த மின்பாதைக்கு மாற்றாக, உயர் அழுத்த மின்பாதை அமைக்க, 2.9 கோடி ரூபாய் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட பாலகோபாலபுரம் வீதியில் உள்ள இடத்தில் புதிதாக ஜெனரேட்டர், உயர் அழுத்த மின்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தரை தள கட்டடம் கட்டப்பட்டது. புதிதாக டிரான்ஸ்பார்ம் கொண்டு வரப்பட்டது.பணிகள் வேகமாக நடந்த நிலையில், முதல் தளம் கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதல் நிதியாக, 35 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. நிதி கிடைக்காததால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

புதர் மண்டியது!

பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், கடந்த, மூன்று ஆண்டுகளாக வளாகம், கட்டடம் முழுவதும் புதர் மண்டி பராமரிப்பின்றி கிடக்கின்றன. பராமரிப்பில்லாமல் கட்டடம் வீணாகும் நிலை உருவாகி உள்ளது. அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அரசு மருத்துவமனையில், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் இடையூறு ஏற்படுகிறது. கோடை காலங்களில் மின்தடை ஏற்பட்டால் நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, அரசு, உயர் மின் அழுத்த மின்பாதை அமைப்பதற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

பணம் வந்தாச்சு!

அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறுகையில், ''அரசு மருத்துவமனைக்கு தனியாக டிரான்ஸ்பார்ம் அமைக்க கூடுதல் நிதி வேண்டுமென அரசிடம் கோரப்பட்டது. தற்போது, அரசு, 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும். உயர் மின் அழுத்த பாதை அமைத்தால், தடையில்லா மின்சாரம் கிடைக்கும்,' என்றார்.

சலவையகத்துக்கும் நிதி ஒதுக்கீடு!

அரசு மருத்துவமனையில், நவீன சலவையகம் அமைக்கப்படுகிறது. இதற்காக, கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. கட்டடம் கட்டிய பின், உபகரணங்கள் இல்லாமல் செயல்பாடு இல்லாமல் காட்சிப்பொருளாக இருந்தது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.இதையடுத்து, நவீன சலவையகத்துக்கு, 1.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதால், உபகரணங்கள் விரைவில் நிறுவப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை