| ADDED : ஜூலை 08, 2024 11:02 PM
கோவை;புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில், 50 ஏழை மாணவிகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று, முதல்வர் வீரமணி தெரிவித்துள்ளார். அரசு மகளிர் கல்லூரியில் சிறப்பு பிரிவு மற்றும் பொதுப் பிரிவு கலந்தாய்வு கடந்த மே மாதம் துவங்கி, ஜூன் மாதம் வரை, இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், ஜூலை 3ம் தேதி துவங்கப்பட்டன.இந்நிலையில், 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை தொடர்பான அரசாணை ஜூன் இறுதியில் மாநில அரசால் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில், அரசு மகளிர் கல்லூரியில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை பணி நேற்று துவங்கியது.இக்கல்லூரியில், வணிகவியல் பாடப் பிரிவில் 12 இடங்களும், தமிழ் பாடப் பிரிவில் 10 இடங்களும், ஆங்கிலப் பாடப் பிரிவில் 10 இடங்களும், கணிதப் பாடப் பிரிவில் 8 இடங்களும், கணினி அறிவியல் பாடப் பிரிவில் 10 இடங்களும் என, 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கல்லூரி முதல்வர் வீரமணி கூறுகையில், கணினி பாடப் பிரிவில், அனைத்து இடங்களிலும் மாணவிகள் சேர்க்கை முழுமை பெற்றுவிட்டது. மற்ற பாடப் பிரிவுகளிலும் தீவிரமாக சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.