மலைப்பாதையில் விபத்து தவிர்க்க அறிவுரை வாகனங்களை கவனமாக இயக்குங்க!
வால்பாறை, ; வால்பாறை, மலைப்பாதையில் இயக்கப்படும் சுற்றுலா வாகனங்களால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என, போலீசார் தெரிவித்தனர்.தமிழகத்தில், ஊட்டி, கொடைக்கானலை அடுத்து வால்பாறைக்கு அதிகளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இயற்கை அழகையும், வனவிலங்குகளையும், பசுமையாக காணப்படும் தேயிலை தோட்டங்களையும் ரசித்த படி சுற்றுலா பயணியர் வால்பாறைக்கு வருகின்றனர்.வால்பாறையில் இருந்து, ஆழியாறு வரையிலான ரோட்டில், 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. மலைப்பாதையில் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை ஒரே ரோட்டில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வேறு மாற்றுப்பாதை வசதி இல்லாததால், விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் ரோடுகளை விரிவுபடுத்தியுள்ளனர்.இருப்பினும், கொண்டைஊசி வளைவுகளிடையே செல்லும் வாகனங்கள், முன்னால் செல்லும் வாகனங்களை முந்தி செல்லும் போது, சில நேரங்களில் விபத்து ஏற்படுவதோடு, வாகனங்கள் கவிழ்ந்து உயிரிழப்பும் ஏற்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி சென்ற லாரியில், 11வது கொண்டைஊசி வளைவில் முந்தி செல்ல முயன்ற சுற்றுலாவேன் உரசியதில் விபத்துக்குள்ளானது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.அங்கிருந்த, மற்ற வாகன ஓட்டுநர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி, வாகனங்களை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.போலீசார் கூறியதாவது:வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர், மலைப்பாதையில் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். சமவெளிப்பகுதியில் வாகனங்களை இயக்குவதை போன்று மலைப்பாதையில் அதிவேகமாக இயக்க கூடாது.வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வால்பாறை - ஆழியாறு ரோட்டில் சாலை விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். விபத்துகளை தவிர்க்க, வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில், நிதானமாகவும், கவனமாகவும் வாகனங்களை இயக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.