உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கவியருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

கவியருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆழியாறில் உள்ள கவியருவியில் குளிக்க, பல மாதங்களுக்கு பின், சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி அருகே, ஆழியாறு மற்றும் வால்பாறை பகுதிக்கு, அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகின்றனர். ஆழியாறில் உள்ள கவியருவி, தண்ணீர் வரத்து இல்லாததால், கடந்த ஜன., மாதம் மூடப்பட்டது.கடந்த, மே மற்றும் ஜூன் மாதங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையில் நீடித்த கனமழையால், அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. அவ்வப்போது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால், பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணியர் அருவிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டது.இதனால், அருவி வரை வந்த மக்கள் ஏமாற்றத்துடனும் திரும்பிச் சென்றனர். தற்போது, அருவியில் சீராக தண்ணீர் வரத்து காணப்படுவதால், நேற்று முதல், சுற்றுலா பயணியர் குளிக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் கனமழை பொழிவு இல்லாவிட்டாலும், கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மேகமூட்டமாகி, சாரல் மழை பெய்வதை சுற்றுலா பயணியர் ரசித்து செல்கின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'சுற்றுலா பயணியர் அருவிக்குச்செல்லவும், குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டது. தற்போது, அருவியில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால், மீண்டும் கவியருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிந்தனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ