| ADDED : ஆக 02, 2024 05:14 AM
கோவை : சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் விருது வழங்க, கோவை மாநகராட்சி சமர்ப்பித்த புள்ளிவிபரங்கள் சரியாக இருக்கிறதா என திருச்சி குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அம்மாநகராட்சி கமிஷனர் சரவணன் தலைமையிலான குழுவினர், குப்பையில் உரம் தயாரிக்கும் மையங்களை இன்று (ஆக., 2) ஆய்வு செய்கின்றனர்.தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது, சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு முதல்வர் விருது வழங்கப்படும். இவ்விருது வழங்குவதற்கு சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, துாத்துக்குடி மாநகராட்சிகள் பரிந்துரைக்கப்பட்டன. இம்மாநகராட்சிகள் சமர்ப்பித்த புள்ளிவிபரங்கள் சரியானதாக இருக்கிறதா என வெவ்வேறு மாநகராட்சிகளில் இருந்து செல்லும் குழுவினர் ஆய்வு செய்து மதிப்பெண் வழங்குகின்றனர். இறுதியாக, மதிப்பெண் அடிப்படையில், சிறந்த மாநகராட்சி தேர்வு செய்யப்படுகிறது.அவ்வகையில், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையிலான குழுவினர், சேலத்தில் ஆய்வு செய்தனர். கோவைக்கு திருச்சி மாநகராட்சியில் இருந்து வந்திருக்கின்றனர். இக்குழுவினர், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.மாநகராட்சியின் மொத்த வருவாய்; செலவு; வரி வசூல் எவ்வளவு; ஆண்டுதோறும் வரி வசூல் உயர்கிறதா. மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வாறு செலவிடப்பட்டு உள்ளது; என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பன பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர்.பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு உள்ளிட்ட ஒவ்வொரு துறையினரும் வழங்கியிருந்த தகவல்கள் அனைத்தும் சரியானதாக இருக்கிறதா என்பதை சரிபார்த்தனர். திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் தலைமையிலான குழுவினர், இன்று (ஆக., 2) குப்பையில் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.