இனி தப்பவே முடியாது! வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம்; தவறினால் ஜப்தி நடவடிக்கை பாயுமென எச்சரிக்கை
பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி நகராட்சியில் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு, 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை பாயும், என நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் என, ஆண்டுக்கு 33.77 கோடி ரூபாய் வருவாய் வர வேண்டும்.இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள், கட்டணம், மற்றும் வாடகை உள்ளிட்டவைகாலக்கெடுவிற்குள் செலுத்தாமல் நிலுவையாக உள்ளது. ரூ.28 கோடி நிலுவை
கடந்தாண்டு சொத்து வரி, 7.79 கோடி ரூபாய்; காலி மனை வரி 1.99 கோடி; குடிநீர் கட்டணம் ரூபாய் 64.42 லட்சம்; தொழில் வரி, 2.85 கோடி; குப்பை சேவை கட்டணம் ரூபாய் 33 லட்சம்; பாதாள சாக்கடை கட்டணம் 45 லட்சம் ரூபாய் செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. நடப்பாண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி, 12.83 கோடி; காலி மனை வரி 90 லட்சம்; குடிநீர் கட்டணம் 2 கோடி; தொழில் வரி 1.10 கோடி; குப்பை சேவை கட்டணம் 73 லட்சம்; பாதாள சாக்கடை கட்டணம் 1.18 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.மொத்தமாக கடந்த, இருஆண்டுகளில் மட்டும், 28 கோடியே, 84 லட்சத்து, 42 ஆயிரம் ரூபாய் வரி நிலுவையில் உள்ளது. ஒத்துழைக்கணும்!
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது: சொத்து வரி முதல் அரையாண்டுக்கு ஏப்., மாதமும், இரண்டாம் அரையாண்டுக்கு அக்., மாதமும் செலுத்தி, ஐந்து சதவீதம் தள்ளுபடி பெறலாம். முதல் அரையாண்டுக்கு சொத்து வரி செப்., மாதத்துக்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கு மார்ச் மாதத்திற்குள்ளும் வரிகளை நிலுவை இன்றி செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த தவறியவர்களின் பெயர்கள் குறிப்பிட்டு, அவசியம் ஏற்படும் பட்சத்தில் பொது இடங்களில் பெயர் பலகைகள் வைக்கப்படும்.அதன் பின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்.கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யாமலும், குடியிருப்பு வரி செலுத்திக் கொண்டு, வணிக நோக்கத்தில் பயன்படுத்துகின்றனர். பெரிய கட்டடங்கள் இருந்த போதிலும் குறைந்த அளவு கணக்கு காட்டி, சிலர் வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.இவர்கள் தாங்களாகவே முன்வந்து முழுமையான மற்றும் முறையான வரியை விதித்துக்கொள்ள, 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தற்போது வரி செலுத்தக்கூடிய கட்டடத்தை யார் உபயோகப்படுத்துகிறார்களோ, அவர்களிடமிருந்தும் வரி வசூல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.தவறும் பட்சத்தில் நகராட்சி வருவாய் பிரிவு அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து கண்டறிந்து, சட்டப்படி அபராதம் விதிப்பதுடன் வரி ஏய்ப்பு செய்து வந்ததற்காக கட்டடத்தை ஜப்தி செய்யநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.காலி மனை வரி நிலுவை வைத்திருந்தால், அந்த விபரங்கள் பத்திரப்பதிவு துறைக்கு தெரிவித்து அம்மனைகள் பதிவு மேற்கொள்ள தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக வரியைசெலுத்தி முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
குத்தகை நிலுவையை செலுத்துங்க!
நகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களில் சிலர், இந்தாண்டு வாடகை, 3.46 கோடி ரூபாய் செலுத்தாமல் தொடர்ந்து கடை நடத்துகின்றனர். எனவே, நகராட்சி கடைகளை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் வாடகையை ஒரு வார காலத்திற்குள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், கடைகளை பூட்டி 'சீல்' வைப்பதுடன், மறு ஏலம் விட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோன்று, எவரேனும் உள்வாடகைக்கு விட்டு இருந்தாலோ, கடையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலோ, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்து, மறு ஏல நடவடிக்கை எடுக்கப்படும்.நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாத வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் உரிமத்தை ரத்து செய்யவும், மின் இணைப்பு துண்டிக்கவும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு பரிந்துரை செய்யப்படும், என, கமிஷனர் தெரிவித்தார்.