| ADDED : மார் 31, 2024 08:57 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.தற்போது கொளுத்தி வரும் வெயிலுக்கு இளநீரை சிறந்த பானமாக மக்கள் பருகி வருகின்றனர்.இந்நிலையில், ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம், நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 36 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 14,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவு, இளநீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. வடமாநிலங்களில் இளநீரின் தேவை மிகவும் அதிகரித்துள்ள சூழலில், எந்த பகுதிக்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அந்தளவுக்கு இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, எக்காரணத்தை கொண்டும் இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.