| ADDED : மே 01, 2024 10:58 PM
பொள்ளாச்சி : ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்தால், சின்னவெங்காயத்தில் ஏற்படும் பூச்சி தாக்குதலை தடுக்க முடியும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்றுப்பகுதி கிராமங்களில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், மென்மையான தண்டுகளை கொண்ட சின்ன வெங்காயம், அடிக்கடி பூச்சி, நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறது. பூச்சி தாக்குதல் காரணமாக அதிக இழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.இந்நிலையில், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்குமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தோட்டக்கலைத் துறையினர் கூறியதாவது:வெளிர்மஞ்சள் நிறத்தில் காணப்படும் இலைப்பேன், செடியிலுள்ள இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால், இலைகள் வெண் திட்டுகளாக காணப்படும். இலைகள் நுனியிலிருந்து வாடும். எனவே, இரண்டரை ஏக்கருக்கு மீதைல் டெமட்டான், 500 மில்லி அல்லது பாஸ்போமிடான், 300 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம்.பயிர்களுக்கு அதிக தழைச்சத்து இடுவது, நெருக்கி நடுவது கூடாது. சாம்பல் நிறத்தில் காணப்படும் வெங்காய ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெந்நிற புழுக்கள், நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தை குடைந்து உட்கொண்டு அழுக செய்யும்.இதற்கு, மீதைல் டெமட்டான் மருந்தை ஒரு லிட்டருக்கு ஒரு மி.லி., வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, விவசாயிகள் தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, கூறினார்.