உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கொங்கு மண்டல கல்லுாரிகள் டாப்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கொங்கு மண்டல கல்லுாரிகள் டாப்

கோவை:இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிவடைந்துள்ள நிலையில், 83.85 சதவீத இடங்கள் நிரம்பி, கொங்கு மண்டலம் முதலிடத்தில் உள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், 440க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ளன. இந்நிலையில், கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளை, மாணவர்கள் அதிகளவு தேர்வு செய்துள்ளனர். கொங்கு மண்டல கல்லுாரிகளில் உள்ள, 59 ஆயிரத்து, 679 இடங்களில், 50 ஆயிரத்து, 039 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். மொத்த இடங்களில், 83.35 சதவீத இடங்கள் நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கோவை, சி.ஐ.டி., பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, பி.எஸ்.ஜி., ஐ.டெக்., கோவை, ஜி.சி.டி., வி.எஸ்.பி., குழுமத்தை சேர்ந்த கரூர் வி.எஸ்.பி., இன்ஜினியரிங் கல்லுாரி, கோவை வி.எஸ்.பி., இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளிட்ட பல்வேறு கல்லுாரிகளில், 100 சதவீத இடங்கள் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.குறைந்தளவாக, தென் மண்டல மாவட்டங்கள் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தேனி, துாத்துக்குடி ஆகிய பகுதிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. தென்மண்டலத்தில் உள்ள, 37 ஆயிரத்து, 745 இடங்களில், 21 ஆயிரத்து, 981 இடங்கள் நிரம்பியுள்ளன. இது, 58.24 சதவீதம்.கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி கூறுகையில், ''சென்னையை போல், கொங்கு மண்டலத்தில், உள்ள கல்லுாரிகளின் உட்கட்டமைப்பு, மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் ஆகியவற்றின் காரணமாக, மாணவர்கள் அங்குள்ள கல்லுாரிகளை அதிகம் விரும்புகின்றனர். கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் மாணவர்களுக்கு தொழில்நுட்பம், தொழிற்சாலையில், பயிற்சிகள் அதிகம் கிடைக்கின்றன. கிராமப்புற மாணவர்களுக்கு அது கிடைப்பதில்லை. மாணவர்கள் தங்களது திறன்களை, எளிதில் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. அதேபோல், வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள சென்னை, கொங்கு மண்டல கல்லுாரிகள் அதிக வாய்ப்பு அளிக்கின்றன. சென்னையில், நகரத்தில் இருந்து கல்லுாரிகள் அதிக தொலைவில் உள்ளன. ஆனால், கோவை போன்ற நகரங்களில் முக்கியமான கல்லுாரிகள் பல, நகரத்துக்குள் இருப்பது மாணவர்களுக்கு மிகவும் வசதியான ஒன்றாக உள்ளது. மேலும் கல்லுாரிகள், 60 - 70 கி.மீ., வரை பஸ்களை இயக்குகின்றன. இதனால், துாரம் என்பது மாணவர்களுக்கு பெரிய விஷயமாக தெரிவதில்லை. தென்மண்டலத்தில் சேர்க்கை குறைவு என்றாலும், 50 சதவீதத்துக்கு மேலான இடங்கள் பூர்த்தியாகி உள்ளன. உட்கட்டமைப்பு, வசதிகளை பெருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ellar
செப் 11, 2024 13:12

கல்லூரிகளுக்கு மார்க்கெட்டிங் செய்வதில் முன்னணியில் உள்ள காந்தி சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியது இல்லை மக்களுக்கும் நன்கு புரிந்துள்ள சமாச்சாரங்கள் இவருக்குத்தான் புரியவில்லை. நல்ல சமூக சூழலும் கட்டுப்பாடு கொண்ட தனியார் நிர்வாகங்களும் மாணவர்களை நன்கு கவனிக்கும் ஆசிரியர்களும் இங்கு இருப்பது இவருக்கு தெரிந்தாலும் மனசாட்சி அடகு வைத்து சீட்டுகளை விற்பனை செய்ய உதவுவது இவருக்கு தேவை. ஆனால் தங்களுடைய குழந்தைகளை படிக்க வைக்க இருக்கும் பெற்றோர்களுக்கு இது தேவை இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை