போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது
போத்தனூர்; குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., செல்வபாண்டியன். நேற்று முன்தினம் மதியம் ஸ்டேஷனில் பணியிலிருந்தார். அப்போது, கோவைபுதூரில் வசிக்கும் கார்த்திகேயன், 30 என்பவர் அங்கு வந்தார். தனது இரண்டாவது மனைவி மேகலா குறித்து புகார் கொடுக்க வேண்டுமென, எஸ்.எஸ்.ஐ.,யிடம் கூறினார். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக, எஸ். எஸ்.ஐ., பதிலளித்துள்ளார்.ஆவேசமடைந்த கார்த்திகேயன், வெளியே ஓடி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்தார். இதனைக் கண்ட அங்கிருந்த போலீசார் அவரை பிடித்து, பாட்டிலை பறித்தனர். தொடர்ந்து எஸ். எஸ்.ஐ.. புகாரில் வழக்கு பதிந்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.