மேலும் செய்திகள்
தமிழகம்... கோவை...! தேசிய சிறுதொழில்கள் தினம்!
30-Aug-2024
கோவை:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், தொழில்துறையினருடன் சந்திப்பு இன்று மாலை 5:00 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், கோவை தொழில்துறையினர் இதுவரை சந்தித்து வந்த, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.முன்னதாக, நேற்று தொழில்துறையினருடன் கலந்துரையாடல் கூட்டம், கொடிசியா வர்த்தக வளாகத்தில், மத்திய எம்.எஸ்.எம்.இ., அமைச்சகத்தின் கூடுதல் மேம்பாட்டு கமிஷனர் இஷிதா கங்குலி திரிபாதி தலைமையில் நடந்தது.இன்று காலை, 10:00 மணியளவில், ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு, டெக்ஸ்டைல், லெதர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டங்களின் முடி வில், தொழில்துறையினரின் கோரிக்கைகள், அதிகாரிகளால் தொகுக்கப்பட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மாலை, 4:00 மணியளவில் வழங்கப்படவுள்ளது.கோவையில் நேற்று நடந்த கூட்டத்தில், கொடிசியா, டேக்ட், கிரில், கோபியோ, கன்ட்ரோல் பேனல், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், கொங்கு தொழில்முனைவோர், கோஸ்மா, சிட்கோ, சீமா, சைமா உள்ளிட்ட, 30 தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகள், தங்கள் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர். கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். இக்கூட்டத்தை, கொடிசியா அமைப்பினர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இஷிதா கங்குலி திரிபாதி கூறியதாவது:எம்.எஸ்.எம்.இ., சார்ந்த கொள்கை முடிவுகள் உருவாக்கப்பட்டு வரும் சூழலில், கோவை தொழில்துறையினரின் ஆலோசனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தொழில்துறையினர் கூறியதில் இருந்து, 61 கோரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சில, பிற துறைகள் சார்ந்த கோரிக்கை என்பதால், அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும், இரண்டு லட்சம் குறு நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாகவும், 11 சதவீத சிறு நிறுவனங்கள் - நடுத்தர நிறுவனங்களாகவும், 2 சதவீத நடுத்தர நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாகவும் தரம் உயர்ந்துள்ளன.தொடர்ந்து, அரசு பல்வேறு உதவிகளை, வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
எம்.எஸ்.எம்.இ., தொழில்நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி., விதிப்பை, ஜாப் ஆர்டர் பெறும் நிறுவனங்களுக்கு 5 சதவீதமாகவும், பிற நிறுவனங்களுக்கு 12 சதவீதமாகவும் குறைக்க வேண்டும்.பருத்தி மற்றும் பிற மூலப்பொருட்கள் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும். உலக சந்தையில் விலை குறைவாக கிடைக்கும் சூழலில், இறக்குமதி வரி காரணமாக உற்பத்தி செலவினங்கள் அதிகரித்து, சர்வதேச சந்தை விலை போட்டியை சமாளிக்க இயலவில்லை.திறன் மிக்க பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்வதால், தொழில்நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்க மையம் ஏற்படுத்த வேண்டும். ஜெம் போர்டல் பதிவு, பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள், மானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் பெறுவது சவாலாக உள்ளது. முத்ரா லோன் வளர்ந்த நிறுவனங்களுக்கு, மட்டுமே வழங்கப்படும் சூழலில், புதிதாக கடன் கோருபவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.நாட்டின் மொத்த ஜி.டி.பி., பங்களிப்பு, எம்.எஸ்.எம்.இ., 30 சதவீதம் வழங்கும் சூழலில், நிதி ஒதுக்கீடு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. எம்.எஸ்.எம்.இ., பிரிவுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
30-Aug-2024