உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு பராமரிக்கும் விபரம் அனுப்ப உத்தரவு

ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு பராமரிக்கும் விபரம் அனுப்ப உத்தரவு

கோவை;தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என, உணவுப் பொருள் வழங்கல் துறை விளக்கம் கேட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.சில சமயங்களில் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது அல்லது தரமில்லாத அரிசி வழங்கப்படுகிறது. கோதுமை இரு மாதங்களுக்கு ஒருமுறையே வழங்கப்படுகிறது. சில கடைகளுக்கு போதுமான ஒதுக்கீடு வழங்காமல், பொதுமக்களை அலைக்கழிக்க விடுகின்றனர்.இதுபோன்ற புகார்களை பதிவு செய்ய, ரேஷன் கடைகளில் பதிவேடு வைக்க அரசு முன்வருமா என, சட்டசபையில் கேள்வி கேட்கப்பட்டது.இக்கேள்வி கேட்ட கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ., காந்திக்கு அரசு தரப்பில் பதிலறிக்கை அனுப்புவதற்காக, ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு பயன்படுத்தப்படுகிறதா; பெறப்பட்ட புகார்கள் எண்ணிக்கை; தீர்வு செய்யப்பட்ட விபரங்களை, மாவட்டம் வாரியாக தகவல் அனுப்பக் கோரி, மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு, உணவுப் பொருள் வழங்கல் துறை முதன்மை செயலர் ஹர்சஹாய் மீனா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ