உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பில்லுார் அணை நிரம்பியது; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பில்லுார் அணை நிரம்பியது; பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்ட எல்லையில், பில்லுார் மலைப்பகுதியில், 100 அடி உயரத்தில் பில்லுார் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, அணை நிரம்பியதாக அறிவித்து, அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடுவார். நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்துள்ளது. இதில் அவலாஞ்சியில், 122 மில்லி மீட்டர், குந்தாவில், 23 மி.மீ., கெத்தையில், 11 மி.மீ., பரளியில், 8 மி.மீ., பில்லூரில், 7 மி.மீ., மழை பெய்துள்ளது. அதனால் அதிகாலை, 4:00 மணிக்கு, வினாடிக்கு, 14,000 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைக்கு வந்துள்ளது. இதனால் அதிகாலை, 5:00 மணிக்கு அணையின் நீர்மட்டம், 97 அடியை எட்டியதை அடுத்து, அணை நிரம்பியதாக அறிவிக்கப்பட்டது. மின்சாரம் உற்பத்தி செய்ய, 6000 கனஅடி தண்ணீரும், அணையில் உள்ள நான்கு மதகுகளில் தலா, 2000 கன அடி என, 8000 கன அடி உள்பட, மொத்தம், 14,000 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகபட்சமாக, அணையில் இருந்து பவானி ஆற்றில் திறந்து விட்டனர். இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பில்லுார் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.அதனால் அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடுவதால், ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் கூறியதாவது: பில்லுார் அணை நிரம்பியதை அடுத்து, அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடுவதால், வெள்ள அபாயம் ஏற்பட உள்ளது. எனவே தாழ்வான இடங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். மேலும் வெள்ள அபாயம் எச்சரிக்கை குறித்து, ஆற்றின் கரையோரம் உள்ள, வனபத்ரகாளியம்மன் கோவில், உப்புப்பள்ளம், மேட்டுப்பாளையம், ஊமப்பாளையம், ஜடையம்பாளையம், சிறுமுகை ஆகிய பகுதிகளில், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என தாசில்தார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ