புகையிலை பொருட்கள் விற்ற மூவர் கைது
பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி வி.ஐ.பி., கார்டன் பகுதியில், கிழக்கு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.போலீசார் விசாரணையில், ஜோதிநகர் கஸ்துாரி கார்டனை சேர்ந்த முகம்மது அபிதீன்,51, என்பவர், மொத்த வியாபாரமாக பீடி, சிகரெட் விற்று வருவது தெரியவந்தது. விற்பனைக்காக புகையிலை பொருட்கள் கொண்டு வந்ததும் தெரிந்தது.அவரை கைது செய்த போலீசார், 52.675 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.* ஆனைமலை, மீனாட்சிபுரம் நாகூர் பிரிவு அருகே, ஆனைமலை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், மீனாட்சிபுரத்தை சேர்ந்த நுார்ஜான்,60, என்றும், பெட்டிக்கடை வைத்து இருப்பதும்; தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 213 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.* நெகமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ், 39. இவர், நெகமம் டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள பெட்டி கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பெட்டிக்கடையில் சோதனை செய்த போலீசார், 60 புகையிலை பாக்கெட்டை பறிமுதல் செய்து, சவுந்தர்ராஜனை கைது செய்தனர். பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
ஆனைமலை அருகே, எட்டித்துரை பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர். அங்கு தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பணம் வைத்து சீட்டாடிய, கோட்டூர் சிவராஜ்,48, சேத்துமடை செந்தில்,49, ரவி,55, காளியாபுரம் முருகானந்தம்,52, மோகன், 54, நித்தியானந்தம்,42, பொள்ளாச்சி பிரபாகரன்,63, ஆகியோரை கைது செய்து, 3,300 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
நெகமம் டாஸ்மாக் மதுக்கடை அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக, நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் நின்றிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனிகுமார், 39, என்பவரிடம் விசாரித்தனர். இதில், பழனிகுமார் மது விற்பனை செய்தது உறுதியானதை தொடர்ந்து, அவரிடம் இருந்து, 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.