| ADDED : ஆக 02, 2024 05:27 AM
கோவை : மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக சாலை மறியல் - போராட்டத்தில் ஈடுபட்ட இ.கம்யூ., மாநிலச் செயலாளர் முத்தரசன், மா.கம்யூ., மாநில தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இ.கம்யூ., மா.கம்யூ., இந்திய மாணவர் சங்கம் ஆகியோர் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதற்கு மா.கம்யூ., தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ., மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில், 500க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது: அனைத்து மாநிலங்களுடைய தேவைகளை அறிந்து பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு மாறாக மோடி அரசு, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களை புறக்கணித்துவிட்டு, பீகார், ஆந்திரா என, இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்கி உள்ளது. விவசாய விளைபொருளுக்கு விலை நிர்ணய சட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி குறித்து இந்த பட்ஜெட்டில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிரான பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு முத்தரசன் கூறினார்.