| ADDED : ஜூலை 10, 2024 01:43 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே சோமந்துறைசித்துாரில் படித்த மற்றும் படிப்பை தொடர முடியாத பெண்களுக்கு தையல் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு அளிக்கப்படுகிறது.பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில் நுட்பக்கல்லுாரி மற்றும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி விரிவாக்க சேவைத் துறை, 'சக்தி புரா' திட்டத்தில், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச தொழிற் பயிற்சி வகுப்பு, சோமந்துறைசித்துார், மணி மண்டப வளாகத்தில் துவங்கப்பட்டது.என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் பி.ஆர்.ஓ., நாகராஜன், அனைவரையும் வரவேற்றார். செயலாளர் ராமசாமி குத்துவிளக்கு ஏற்றி, பயிற்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''சோமந்துறைசித்துாரில் உள்ள இந்த வளாகம், நிரந்த பயிற்சி மையமாக அமைக்கப்படும். படித்த, படிப்பைத் தொடர முடியாத இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு, தையல் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, அவரவர் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்,'' என்றார்.எம்.சி.இ.டி., கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி, என்.பி.டி.சி., கல்லுாரி முதல்வர் அசோக், என்.ஐ.ஏ., பள்ளிகளின் நிர்வாக அலுவலர் சின்னசாமி, கல்லுாரி டீன் ஸ்டான்லி செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லுாரி இயந்திரவியல் துறைத் தலைவர் ராமதிருமுருகன் நன்றி கூறினார்.