| ADDED : ஆக 04, 2024 10:09 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால், சோலையாறு அணை நீர்மட்டம் சில நாட்களுக்கு முன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால், பரம்பிக்குளம் அணைக்கு அதிகளவு தண்ணீர் சென்றடைந்தது.இந்நிலையில், பரம்பிக்குளம் அணையில் இருந்து துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம் வழியாக சர்க்கார்பதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.இதையடுத்து, நேற்று மாலை முதல், சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவங்கப்பட்டு, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேதமடைந்த காண்டூர் கால்வாய் பகுதிகளில், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கால்வாய் முழுவதும் தேங்கியுள்ள மண் மற்றும் கழிவுகள் அகற்றபட்டன. இதையடுத்து, சர்க்கார்பதி நீர் மின் உற்பத்தி நிலையத்தில், இன்று (நேற்று) முதல் வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு, 12 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.நீர்திறப்பு படிப்படியாக அதிகரித்து, மின் உற்பத்தியும் அதிகரிக்கப்படும். இங்கிருந்து காண்டூர் கால்வாய் வழியாக கொண்டு செல்லப்படும் தண்ணீர், திருமூர்த்தி அணையில் இருப்பு வைத்து, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு வினியோகிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.