உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி கவனம் வேண்டும்!ஏனோ காணோம் வளர்ச்சி

 அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி கவனம் வேண்டும்!ஏனோ காணோம் வளர்ச்சி

கோவை,/கோவை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தரத்திலும், தேர்ச்சி சதவீதத்திலும் முன்னேற்றம் கண்டு இருந்தாலும், அரசு பள்ளிகளின் செயல்பாடுகளில் பெரியளவில் முன்னேற்றம் இல்லை. நடப்பாண்டு தேர்வில், 89.10 சதவீத தேர்ச்சியை கோவை அரசு பள்ளிகள் பெற்றுள்ளன.கோவை மாவட்டத்தில் 196 அரசுப் பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றன. இதில், 34 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.அரசுப் பள்ளிகளில் இருந்து 12 ஆயிரத்து 148 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 10 ஆயிரத்து 824 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் வாயிலாக, 89.10 சதவீத தேர்ச்சி அரசுப் பள்ளிகள் பெற்றுள்ளன. 34 பள்ளிகள் சென்டம் பெற்ற நிலையில், 90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளில், 42 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.அரசுப் பள்ளிகளில் இருந்து, 100 சதவீத தேர்ச்சி பெற்ற பெரும்பாலான பள்ளிகளில் குறைவான எண்ணிக்கை கொண்ட மாணவர்களே, தேர்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, கற்றல் கற்பித்தல் தவிர்த்த கூடுதல் பணிச்சுமை மற்றும் 'ஆப்சன்ட்' மாணவர்களால் தேர்ச்சி சதவீதம் குறைவதாக, ஆசிரியர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.கோவையில் அரசுப் பள்ளிகள் தவிர்த்து, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 91.18 சதவீத தேர்ச்சியும், மாநகராட்சிப் பள்ளிகள் 89.97 சதவீத தேர்ச்சியும், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் 91.3 சதவீத தேர்ச்சியும், பழங்குடியின நலத் துறை கீழ் செயல்படும் பள்ளிகள் 94.64 சதவீத தேர்ச்சியும், நகராட்சிப் பள்ளிகள் 83.48 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலமுரளி கூறுகையில், ''அரசுப் பள்ளிகளில் கடந்தாண்டை காட்டிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. பள்ளிகள் வாரியாக, வட்டாரம் வாரியாக மதிப்பெண் குறைந்த பள்ளிகளில் விளக்கம் கேட்கப்படும். மதிப்பெண் குறைந்ததற்கும், தோல்விகளுக்கும் காரணம் அறிந்து, ஆண்டு துவக்கம் முதலே பயிற்சி அளிக்கப்படும். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஜூலை மாதத்தில் துணைத் தேர்வு நடைபெறவுள்ளது. மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். எவ்வித மனஅழுத்தமும் இன்றி, துணைத் தேர்வுக்கு தயாராகலாம்,'' என்றார்.

இருக்கிறது வழி!

உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறுகையில்,''வாழ்கையில் சிறு கடுகு அளவுக்கு கூட பத்தாம் வகுப்பு தேர்வு என்பது ஒப்பாக இயலாது. இதில், தோல்வி அடைவதால் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. துணைத்தேர்வு உடனடியாக நடத்தப்படும்; அதில் பங்கேற்று எளிதாக பிளஸ்1 படிப்பில், நடப்பாண்டிலேயே சேர்ந்து படிக்கலாம். தோல்வி அடைந்த பாடங்களை மட்டும் எழுதினால் போதும் என்பதால், கண்டிப்பாக பாஸ் ஆகி விடலாம். தோல்வியடைந்த மாணவர்களின் பெற்றோர், இச்சமயத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்பது வாழ்வில் சகஜமானது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

DGk
மே 11, 2024 14:35

தேர்ச்சி விகிதம் என்பது வேறு கல்வி தரம் என்பது வேறு தேர்ச்சி வீதத்தில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ஆனால் கல்வி தரம் மிகவும் மோசம் தன்னுடைய பெயரையே எழுதத்தெரியாதவர் அனைத்திலும் தேர்ச்சி பெற்று வருகிறார்


சமீபத்திய செய்தி