| ADDED : மே 31, 2024 02:15 AM
கோவை:கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், 45 வகையான வெவ்வேறு ரகங்களின் மர விதைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.மரத்திலிருந்து விழும் ஒவ்வொரு விதையும் அந்த மரத்தின் ஒரு துளியாகவே விழுகிறது. அந்த ஒரு துளிக்குள் ஒரு முழு மரமும் இருப்பது தான் இயற்கையின் விந்தை. நம் நாட்டு மரங்களின் விதைகளை சேகரித்து காப்பது, இப்போதைய தேவையாக உள்ளது. இப்பணியை, கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இதுகுறித்து, விஞ்ஞானி அனந்தலட்சுமி கூறியதாவது:கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் உள்ள 'விதை வங்கி' கடந்த 10 வருடங்களாக செயல்படுகிறது. வனமரபியல் வளங்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வனம் மற்றும் காலநிலை மாற்றம் நிறுவன நிதியுதவியுடன், மரங்களின் விதைகள் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு மரமும் ஒரு குணத்தன்மை, வீரியத்தன்மை கொண்டது. தரம் வாய்ந்த மரங்களை மீளுருவாக்கம் செய்வது இதன் முக்கிய நோக்கம். தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், அந்தமான் தீவு பகுதிகளிலும் மரங்களின் விதைகள் சேகரிக்கும் பணி நடந்தது. வனப்பகுதியில் உள்ள தாய் மரங்களில் இருந்து விதைகளை சேகரிக்கிறோம்.தாய் மரங்களை தேர்ந்தெடுத்து, மரபுத்தன்மை வேறுபாட்டை அறிந்து முளைப்புத்திறன், ஈரப்பதம் கண்டறிய வேண்டும். 45 வகையான வெவ்வேறு ரகங்களின் மர விதைகளை சேகரித்து, மைனஸ் 20 டிகிரி சென்டிகிரேடில் பாதுகாத்து வருகிறோம். தேவைகளை பொறுத்து, இவை பயன்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.