பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து, வால்பாறை செல்லும் வழித்தடத்தில், டூ - வீலரில், அதிவேகமாக செல்லும் இளைஞர்களால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.பொள்ளாச்சி அருகே ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு, வார விடுமுறை நாட்களில், அதிகப்படியான சுற்றுலாப் பயணியர் வந்து செல்கின்றனர்.தற்போது, கோடை விடுமுறை என்பதால் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், 'ஜாலியாக' ஊர் சுற்றும் நோக்கில், பைக்கில் வருகின்றனர். குறிப்பாக, 'லேட்டஸ்ட் மாடல்' பைக்கில் வலம் வரும் இளைஞர்கள் சிலர், நெரிசல் மிகுந்த ரோட்டிலும் அதிவேகத்தில் செல்கின்றனர்.மேலும், மலைப்பாதையில் வாகனத்தை குறுக்கும் நெடுக்குமாக இயக்குவது போன்ற பல்வேறு சாகசங்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால், பிற வாகன ஓட்டுநர்கள் விழிபிதுங்கி ஒதுங்கி விடுகின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சக நண்பர்களிடம் தன்னை மிகைப்படுத்தி காட்ட முற்படும் இளைஞர்கள், அதிவேகமாக பைக்கை இயக்குகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ' பதிவுக்காக சாகசங்கள் செய்து, வீடியோவும் எடுக்கின்றனர்.இவர்களின் இச்செயல், சில நேரங்களில், பிற வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறாக மாறி விடுகிறது. மக்கள் நெரிசல் மிகுந்த ரோடுகளில், அதிவேகமாக பைக்கை இயக்குவதால், விபத்து அபாயம் அதிகரிக்கிறது. பைக்கில் அதிவேகம் காட்டும் இளைஞர்களைக் கண்டறிந்து தடுக்க, போலீசார் கண்காணிப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு, கூறினர்.